Jumat, 17 September 2010

இலங்கை சென்ற விவகாரம் விஜய் பட விழாவில் அசின் வெளியேறியதால் பரபரப்பு!


விஜய் நடிக்கும் புதுப் படத்தின் அறிமுக விழாவில் நடிகை அசின் இலங்கை சென்ற விவகாரம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. இதனால் நடிகை அசின்
திடீரென வெளி யேறினார். ‘போக்கிரி’, ‘சிவகாசி’ படத்துக்கு பிறகு விஜய், அசின் இணைந்து நடிக்கும் ‘காவலன்’ படத்தின் அறிமுக விழா பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நேற்று சென்னை தி.நகர் நட்சத்திர ஓட்டலில் நடந்தது. டைரக்டர் சித்திக், தயாரிப்பாளர் ரொமேஷ்பாபு, விஜய், அசின், வடிவேலு ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் விஜய் பேசியதாவது: இப்படத்துக்கு தலைப்பு பிரச்னை இருந்து வந்தது. இப்போது ‘காவலன்’ என்ற பெயர் முடிவாகியிருக்கிறது. இந்த தலைப்பில் பாசிடிவ் வைபரேஷன் இருக்கிறது. இதில் நடிக்கும் ஹீரோயின் அசின் திடீரென்று பாலிவுட்டுக்கு 2 மாதம் சென்றுவிட்டதால் இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

‘இனி ஆக்ஷன் கதைகளில் நடிக்க மாட்டீர்களா?’ என்று என்னிடம் கேட்கிறார்கள். சில படங்களில் ஆக்ஷன் மேலோங்கி இருக்கும். இது வழக்கமான பார்முலா படம் இல்லை. பார்முலா (மசாலா) படங்களில் நடிக்காமல் காதலும், ஆக்ஷனும் கலந்த படத்தில் நடிப்பேன். ‘முன்பு போல் இப்போது படங்களில் ஏன் பாடுவதில்லை?’ என்கிறார்கள். பாட்டு பாடுவது இரண்டாம்பட்சம்தான். நடிப்புக்குதான் முதல் முக்கியத்துவம். இவ்வாறு விஜய் கூறினார்.
பிறகு அசின் பேசும்போது, ‘‘சிவகாசி, போக்கிரியில் விஜய்யுடன் நடித்திருக்கிறேன். இப்படம் ஹாட்ரிக் வெற்றியாக அமையும். சுவீட், சிம்பிள்.. கிளீன் லவ் ஸ்டோரி. அதேபோல் போக்கிரி, வேல் படங்களில் வடிவேலுவுடன் நடித்தேன். இப்படம் அவருடன் நடிக்கும் ஹாட்ரிக் படமாக அமையும்’’ என்றார். அசின் பேசி முடித்ததும் நிருபர்கள் சரமாரியாக கேள்வி கேட்கத் தொடங்கினர். ‘இலங்கையில் இந்தி படப்பிடிப்புக்கு சென்ற விவகாரம் நடிகர் சங்கத்தில் இன்னும் தீராமல் இருக்கிறது. இப்பிரச்னையில் உங்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமீபத்தில் கூட நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி கூறி இருக்கிறார். நீங்கள் மன்னிப்பு கேட்பீர்களா?’ என்ற கேள்விகளால் அசின் தடுமாறினார். பதில் எதுவும் அளிக்கவில்லை. நிருபர்கள் மீண்டும் அதே கேள்விகளை கேட்டதும், அவர் எழுந்து விட்டார்.
உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ‘இத்துடன் இந்த சந்திப்பு முடிந்தது’ என்று அறிவித்தனர். அசின் அவசர அவசரமாக வெளியேறினார். அசினுடன் இருந்த அவரது தந்தையிடம் இதுபற்றி கேட்டபோது, ‘‘நடிகர் சங்கத்தின் கட்டுப்பாட்டை அசின் என்றும் மீறியதில்லை’’ என்றார்.


Tidak ada komentar:

Posting Komentar