Rabu, 15 September 2010

பொன்னர் – சங்கர் சூட்டிங்கை ரசித்து பார்‌த்த முதல்வர்


இன்று காலை பொன்னர் சங்கர் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த முதல்வர் கருணாநிதி சுமார் 1 மணி நேரம் சூட்டிங்கை ரசித்து பார்த்தார். முதல்வர்
கருணாநிதி வார இதழ் ஒன்றில் எழுதிய பொன்னர் – சங்கர் என்ற வரலாற்று கதைதான் பொன்னர் – சங்கர் படத்தின் கதை. நடிகரும், இயக்குனருமான தியாகராஜன் தயாரித்து இயக்கும் இந்த படத்தில் நடிகர் பிரசாந்த் பொன்னர் மற்றும் சங்கர் ஆகிய இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறார். மத்திய அமைச்சர் நெப்போலியன் தலையூர் காளி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்கள் தவிர சத்யராஜ், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், பொன்வண்ணன், ரியாஸ்கான், மனோரமா, பிரபு, சினேகா, குஷ்பு, அம்பிகா, சீதா உள்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் சூட்டிங் வடபழனியில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் ‌விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சூட்டிங்கை பார்ப்பதற்காக முதல்வர் கருணாநிதி இன்று காலை 9.30 வரவிருப்பதாக பொன்னர் சங்கர் குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி சரியாக 9.30 மணிக்கு ஸ்டூடியோவுக்குள் முதல்வர் வந்தார். அங்கு பிரசாந்த், ஜெயராம், சினேகா, குஷ்பு, ரியாஸ்கான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் மேக்கப் போட்டுக் கொண்டு நடிப்பதற்கு தயாராக இருந்தனர். முதல்வரை பார்த்ததும், அனைவரும் முதல்வரிடம் மரியாதை நிமித்தமாக சென்று பேசி, நலம் விசாரித்தனர். முதல்வர் கருணாநிதியும் அவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் சூட்டிங் தொடங்கியது. சூட்டிங்கை சுமார் 1 மணி நேரம் முதல்வர் கருணாநிதி ரசித்து பார்த்தார். பிரசாந்த்தை அழைத்து உண்மையிலேயே படைவீரன் போல இருக்கிறாய்…. என பாராட்டிய முதல்வர், சில பிழைகளையும் திருத்தினார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். முதல்வரின் வருகையால் பொன்னர் சங்கர் சூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு நிலவியது. முதல்வருடன் ஜே.கே.ரித்தீஷ், நெப்போலியன் உள்ளிட்டவர்களும் வந்திருந்தனர்.

Tidak ada komentar:

Posting Komentar